அமலாக்கத்துறையால் அடக்கி வாசிக்கும் அனிதா!
அமலாக்கத்துறை ஆறரை கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கம் செய்த பின்பு ரொம்பவே சைலண்ட் மூடிற்குப் போய்விட்டார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். எதிர்கட்சி வரிசையில் இருக்கும்போதே அண்ணாச்சிப் பிறந்தநாளை அமளிதுமளி செய்துவிடும் தனது ஆதரவாளர்களையும் அண்ணாச்சி இம்முறை அடக்கிவாசிக்கச் சொல்லிவிட்டாராம் . இந்நிலையில், தனது வீட்டில் நெருங்கிய உறவுகளை மட்டும் வைத்து இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டினாராம் அனிதா.
உமரி சங்கர், பில்லா ஜெகன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களிடமும், உதவியாளர் கிருபாவிடமும் , "அமலாக்கத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறோம். அலப்பறை எதுவும் செஞ்சு கூடுதல் வம்புல சிக்க வைச்சுடாதீங்கப்பா" என கறாராக கண்டிஷன் போட்டுவிட்டாராம் அனிதா. இதனால் அண்ணாச்சி ஆதரவாளர்கள் டோட்டல் அப்செட்டாம்.
தூத்துக்குடியில் இருக்கும் அனிதாவின் வீட்டுமுன்பும், சொந்த ஊரான தண்டுபந்து பகுதியில் இருக்கும் வீட்டின் முன்பும் வழக்கமாக நூற்றுக்கணக்கான பதாகைகளும், பலவகையான போஸ்டர்களும் அனிதாவை வாழ்த்திப் பளபளக்கும். இம்முறை அதுவும் கணிசமாக குறைந்துள்ளது. அதுவும் கூட அனிதா சொல்லித்தான் குறைந்ததாம்.