பலே பாலகிருஷ்ணன்!
திருச்சி சரக டிஐஜியாக அண்மையில் பொறுப்பேற்ற வே.பாலகிருஷ்ணனின் வரவால் ஐந்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், சமூக விரோதிகளும் அரண்டு போய் கிடக்கிறார்கள். வந்த வேகத்தில், ஐஜேகே-யின் அதிரடி பிரமுகரான பட்டறை சுரேஷ், திமுக முன்னாள் எம்எல்ஏ-வான கவிதைப்பித்தனின் மகனான கவிவேந்தன் உள்ளிட்ட தேடப்படும் குற்றவாளிகளைத் தூக்கி உள்ளே போட வைத்தார். ஏற்கெனவே மதுரை எஸ்பி-யாக இருந்த போது கிரானைட் குவாரி விவகாரங்களில் பிஆர்பி வகையறாக்களை ஓடஓட துரத்திய பாலகிருஷ்ணன், இப்போது திருச்சி சரகத்தில் மணல் மாஃபியாக்களைக் குறி வைத்திருக்கிறார். மணல் கடத்தலுக்கு காவல் அதிகாரிகள் சிலரும் காவடி தூக்குவதை அறிந்து, “இனி யாராவது சமூக விரோதிகளுடன் சகவாசம் வைத்திருப்பதாகத் தெரியவந்தால் அவர்களின் வேலைக்கே உலை வைத்துவிடுவேன்” என்று எச்சரித்திருக்கும் டிஐஜி, மணல் கடத்தல்கள் குறித்து தகவல் தருவதற்காக பகுதி வாரியாக ஒற்றர் படை ஒன்றையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறாராம்.
கராத்தேக்கு கைகொடுக்கும் சிதம்பரம்
தனது ஆதரவாளரான கராத்தே தியாகராஜனைக் கட்சியிலிருந்து நீக்கியதில் ப.சிதம்பரத்துக்கு அவ்வளவாய் உடன்பாடுஇல்லையாம். இது தொடர்பாக டெல்லி தலைவர்களிடம் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பிய அவர், “உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பே வெளியாகாதபோது அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தஅனுமதித்தது யார்? கூட்டத்தில் அனைவரும் தங்களது கருத்துகளைச் சொல்லலாம் என்று கட்சித் தலைவர் சொன்னதால் தானே கராத்தே தனது கருத்தைச்சொல்லி இருக்கிறார். அவருடைய கருத்தை ஆதரித்து வேறு சிலரும் பேசிய நிலையில், எவ்வித விளக்கமும் கேட்காமல் எந்த விதியின் கீழ் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்று கேட்டாராம். இந்த நிலையில் கடந்த வாரம் சிதம்பரத்தை அவரது இல்லத்தில் போய் சந்தித்துவிட்டு வந்த கராத்தே தியாகராஜன், சிதம்