மதுரை
கரிமேடு பலகாரக் கடை ஒன்றில்...
“என்னங்க இது... ஒரு வடைக்கு ரெண்டு துண்டு பேப்பர் கேட்கிறீங்களே?!”
“ஒரு வடையைப் பிச்சு ரெண்டு பேரும் சாப்பிடத்தான்!”
“டீ மாதிரி வடையிலும் ஒன் பை டூ வா?”
“என்ன பண்றது விலைவாசி எகிறிக்கிட்டே போகுதுல்ல... அதான் வறுமை வடை வரைக்கும் வந்துடுச்சு!”
- பாளை பசும்பொன்,
மதுரை
வேதாரண்யம்
மேலவீதியில் இருவர்...
“என்ன மாப்ளே... கையில இலை தழையோட வர்ற?”
"எல்லாம் வெயிலைச் சமாளிக்கத்தான் மச்சான்... பாட்டிதான் ஐடியா குடுத்தாங்க!”
“அதுசரி! ராமர் பிள்ளை மாதிரி மூலிகையும் கையுமா இருந்தவுடனே மூலிகை பெட்ரோல் ரெடி பண்றியோன்னு சந்தேகப்பட்டுட்டேன்.”
“பெட்ரோல் விக்கிற விலைக்கு அதக்கூட ட்ரை பண்ணலாம்னுதான் மச்சான் தோணுது!”
-ந.விஜய்ஆனந்த்,
தோப்புத்துறை
தஞ்சாவூர்
ஒரு திருமண வீட்டுப் பந்தியில்...
“பாஸ்! மொபைல் நோண்டறதை நிறுத்திட்டு இலையைப் பார்த்து சாப்பிடுங்க..!”
“என் மொபைலை நான் நோண்டறதுல உங்களுக்கு என்ன சார் கஷ்டம்?”
“மொபைலைப் பார்த்துக்கிட்டே, என் இலையில இருந்து லெக்பீஸை எடுத்து நீங்க சாப்பிட்டா... அது எனக்குக் கஷ்டமா இல்லையா... நீங்களே சொல்லுங்க!”
(பக்கத்து இலைக்காரர் பதறுகிறார்)
-வி ரேவதி,
தஞ்சை