’அருக்காணி’க்கு 40 வயசு: மணிவண்ணன் நமக்கு கிடைத்து 40 ஆண்டுகள்!

’அருக்காணி’க்கு 40 வயசு: மணிவண்ணன் நமக்கு கிடைத்து 40 ஆண்டுகள்!

தமிழ் சினிமாவில் ‘ரெண்டு பொண்டாட்டி’ சப்ஜெக்டுகள் நிறையவே வந்திருக்கின்றன. அதேபோல, பொருத்தமில்லாத திருமணங்களை வைத்துக்கொண்டு கதை பண்ணுவதும் புதிதல்ல. 'பட்டிக்காடா பட்டணமா' டைப் கதைகள் ஏகத்துக்கு வந்திருக்கின்றன. ஹிட்டுகளும் தந்திருக்கின்றன. மனதுக்குப் பிடிக்காத மனைவி, திருமணம் நடந்ததையே மறைக்கும் கணவன், அவனுக்கு இன்னொருத்தி மீதான காதல் வாழ்க்கை, இதையெல்லாம் தெரிந்துகொண்டு அந்த அப்பாவிப் பெண் எடுக்கும் முடிவு... என சோகங்களையும் கலகலவெனச் சொன்னவிதத்தில் உயர்ந்து நிற்கிறது ‘கோபுரங்கள் சாய்வதில்லை’!

இயக்குநர் மணிவண்ணனின் முதல் படம். பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து பாக்யராஜுக்குப் பின்னர் வந்த அட்டாகாசமான இயக்குநரின் அற்புதமான ஆரம்பம்.

அசிங்கமான உருவம் கொண்ட கிராமத்துப் பெண் அருக்காணி. நகரத்தில் வேலை செய்யும் நாயகன் முரளி. இருதரப்பு அப்பாக்களும் நண்பர்கள். எனவே இருவரும் சேர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். அருக்காணியைக் கண்டதும் நொறுங்கிக் கதறுகிறான் ஹீரோ. திருமணம் முடிந்து, வேலைக்கு வந்தால், அங்கே உடன் வேலை செய்பவர்கள், அருக்காணியை வைத்து கேலியும் கிண்டலும் செய்து ஓட்டுகிறார்கள். அருக்காணியைக் கொண்டே நாயகனைக் கேலி செய்கிறார்கள். கூனிக்குறுகிப் போகிறான். மிகப்பெரிய அவமானமாக நினைக்கிறான்.

அலுவலகத்தின் சார்பாக வெளிமாநிலம் சென்று பணியாற்றுகிற சூழல். அங்கே விழாவில், விருது வாங்குகிற ஜூலியைச் சந்திக்கிறான். அவளைக் கண்டதும் உள்ளே பூக்கிறது காதல். பெங்களூருவில் இருந்து ஜூலியும் சென்னையில் இருந்து முரளியும் வந்திருக்கிறார்கள். மீண்டும் ஊருக்குச் செல்கிறார்கள். பின்னர், பெங்களூருவுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு செல்கிறான். அங்கே ஜூலியைச் சந்திக்கிறான். இருவருக்கும் மெல்ல மெல்ல காதல் பூக்கிறது. தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆன தகவலைச் சொல்லாமலே அவளுடன் வாழ்கிறான்.

இந்தநிலையில், அருக்காணியை வீடு பார்த்து குடும்பம் நடத்தாமல், இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறான் முரளி. இதனால் அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று தந்தி வர, விழுந்தடித்துக்கொண்டு ஊருக்கு வருகிறான். மனைவியை அழைத்துப் போகச் சொல்லி அப்பா உத்தரவிட, தட்டமுடியாமல் அழைத்துச் செல்கிறான்.

பெங்களூரு வந்து இறங்கியதும் ஸ்டேஷனில் அருக்காணியை விட்டுவிட்டு கிளம்பிச் செல்கிறான். ஜூலியின் அண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். ‘புருஷனைத் தொலைத்துவிட்டு நிற்கிறாள்’ என்று சொல்கிறான். அருக்காணியைக் கண்டதும் முரளி, திடுக்கிட்டுப் போகிறான். பதறுகிறான். தன் கணவன், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறாள் அருக்காணி. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல் கடித்து தாங்குகிறாள்.

கணவன் இன்னொருத்தியுடன் கூத்தடிக்கிறான். அந்த வீட்டில் மனைவி வேலைக்காரியாக இருக்கிறாள். அருக்காணிதான் தன் கணவனின் முதல் மனைவி என்பது ஜுலிக்கு தெரிந்ததா. தெரிந்த பிறகு என்ன செய்தாள்... என்பதையெல்லாம் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’.

மோகன், சுஹாசினி, ராதா, எஸ்.வி.சேகர். வினுசக்ரவர்த்தி, கமலா காமேஷ் என பலரும் நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எவரெஸ்ட் பிலிம்ஸ் கம்பெனி பேனரில் கலைமணி, படத்தைத் தயாரித்ததுடன் கதையையும் எழுதியிருந்தார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மணிவண்ணன். பாரதிராஜாவின் சிஷ்யரான மணிவண்ணன் இயக்கிய முதல் படம் இது. பல தியேட்டர்களில் வெள்ளிவிழா கொண்டாடியது இந்தப் படம்.

கலைமணியிடம், மணிவண்ணனின் திறமையைச் சொல்லி, அவருக்கு சான்ஸ் வழங்கும்படிச் சொன்னவர் யார் தெரியுமா? இசைஞானி இளையராஜா. படத்துக்கு, மணிவண்ணனின் நண்பர் சபாபதிதான் ஒளிப்பதிவாளர். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டடித்தன. ’பூவாடைக்காற்று’ என்ற பாடல் அழகிய மெலடிப் பாடலாக அமைந்தது. . ’எம் புருசன் தான் எனக்கு மட்டும்தான்’ என்ற பாடல் கேட்டு கரைந்து போனார்கள் ரசிகர்கள்.

படத்தை பல தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார்கள். இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தன. மோகன் கச்சிதமான நடிப்பை வழங்கியிருந்தார். ராதாவும் யதார்த்த நடிப்பை வழங்கினார். வினுசக்ரவர்த்தி கலகலக்க வைத்தார். எல்லாரையும் விட சுஹாசினி, நடிப்பிலும் சின்னச் சின்ன முகபாவனைகளிலும் அருக்காணியாகவே வாழ்ந்துகாட்டினார்.

1982ம் ஆண்டு இதேநாளில் வெளியானது ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன. அதிருக்கட்டும்... மணிவண்ணன் எனும் பண்பட்ட இயக்குநர் சகல கதாபாத்திரங்களிலும் வெளுத்துக்கட்டுகிற மணிவண்ணன் நமக்குக் கிடைத்து 40 ஆண்டுகளாகிவிட்டன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in