இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கவைக்கும் ‘இது நம்ம ஆளு!’

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கவைக்கும் ‘இது நம்ம ஆளு!’

சிரிக்கச் சிரிக்க படமெடுக்கலாம். சீரியஸாகவே படத்தைக் கொண்டு போகலாம். சிரிக்கச் சிரிக்க சொல்லிக்கொண்டே, ஒருகட்டத்தில், சீரியஸாகக் கூட கதையை நகர்த்தலாம். ஆனால், சிரிக்கவைத்துக் கொண்டே, சீரியஸான விஷயங்களைப் பேசுவது என்பது செப்படிவித்தை. கலகலவென கைத்தட்டிச் சிரித்துக்கொண்டே இருப்போம். அப்படி சிரித்தபடியே இருக்கும்போதே, நமக்குள் சோகத்தை மூட்டை கட்டி இறக்கிவைப்பது என்பதெல்லாம் அசாதாரணம். இந்த மாயவித்தை எல்லோருக்கும் வந்துவிடாது. அவருக்கு மட்டுமேயான சிறப்பு அது. சமூகத்தில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளை ஜாலியாகவும் கேலியாகவும் சீரியஸாகவும் நக்கலாகவும் கொஞ்சம் ஏடாகூடமாகவும் சொல்வதில் அவர் ஜித்தர். அப்படி எடுக்கப்பட்டதுதான் ‘இது நம்ம ஆளு’. அந்த செப்படிவித்தைக்காரர்... கே.பாக்யராஜ்.

ஹீரோ கோபால் பட்டதாரி. ஆனால் வேலை இல்லை. அப்பாவுக்கு முடி திருத்தும் வேலை. அம்மாவுக்கு கண் ஆபரேஷன் செய்ய பணமில்லை. சென்னைக்கு வேலை தேடி வந்தால், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. சுண்டல் விற்கும் வேலையே கிடைக்கிறது. அப்படி சுண்டல் விற்பதற்கே பூணூல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை. மனம் ஏற்க மறுக்கிறது. வெறுத்துப் போய் நிற்கிறார். ஆனால், பசியே வெல்கிறது. அதேசமயம், சுண்டலுக்காக பிராமண வேஷம் போடமாட்டேன் என்றவர், கணபதி ஹோமத்துக்கு ‘ஸ்வாஹ’ சொல்வதற்காக, வேஷம் போடுகிறார். அதுதான் அவரின் மொத்த வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது.

மந்திரம் தெரியாத அவருக்கு சீனிவாச சாஸ்திரிகள் அடைக்கலம் தருகிறார். தன் வீட்டிற்குப் பின்னே உள்ள போர்ஷன் வீட்டில் தங்கிக்கொள்ள இடம் கொடுக்கிறார். கோயிலில் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார். வேறு வழி... போட்ட வேஷத்தைத் தொடர வேண்டிய கட்டாயம்! .

சாஸ்திரிகள் மிகுந்த ஆச்சாரமானவர். அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார். ஆனால் சாஸ்திரிகளின் தோளில் இருந்த துண்டு தவறி விழ, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் துண்டை எடுத்து அவரிடம் கொடுக்கிறான். அதை வாங்க மறுக்கிறார். இது சீனிவாச சாஸ்திரிகள். பட்டதாரியான கோபால் எல்லோருக்கும் உதவி செய்யும் கொண்டவன். அதைக் கண்டு நெகிழ்கிறார் சாஸ்திரிகள். அதேசமயம், மண்ணில் விழுந்துவிட்ட மீன்களைத் தொட்டு எடுத்து, கூடையில் போடுவதை ஏற்க மறுக்கிறார்.

சீனிவாச சாஸ்திரிகளுக்கு ஒரு மகள். அவள்தான் நாயகி பானு. கோபாலின் வெள்ளந்தித்தனமும் இயலாமையும் ஏழ்மையும் அவளுக்குள் அன்பெனச் சுரந்து, காதலென மலருகிறது. காதலை ஏற்க கோபாலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

கோபாலின் வேஷ டிராமாக்களை அறிந்தவர், சுண்டலுக்காகப் பூணூலும் சிலுவையும் குல்லாவும் போட்டு வியாபாரம் செய்யவைக்கும் கிருஷ்ணய்யர் மட்டுமே! ஒருகட்டத்தில், கோபால் - பானுவின் காதலை வீடு ஏற்கிறது. பிராமண வேடம் போட்ட கோபால், அப்பா அம்மாவையும் செட்டப் செய்து அழைத்து வருகிறார்.

’இது நம்ம ஆளு’ பாக்யராஜ் - ஷோபனா
’இது நம்ம ஆளு’ பாக்யராஜ் - ஷோபனா

திருமணமும் பிரம்மாண்டமாக நடக்கிறது. அடுத்த நிமிடமே... கோபால் பிராமணரல்ல; சிகை திருத்தும் கலைஞரின் மகன் என்பது தெரியவர, சீனிவாச சாஸ்திரிகள், ‘பூணூலைக் கழற்றுடா’ என்கிறார். ‘இனி எம் பொண்ணைத் தொடறதில்லைன்னு சத்தியம் பண்ணு’ என்று கேட்டு, சத்தியம் வாங்கிக்கொள்கிறார். மகளையும் தலைமுழுகுகிறார்.

வீட்டைவிட்டு வெளியே வருகிறாள் பானு. ஆனால் அவளை கோபால் ஏற்க மறுக்கிறான். கோபால் வீட்டுக்கு அருகிலேயே தனி வீட்டில் இருக்கிறாள். பானுவும் கோபாலும் ஒன்றுசேர்ந்தார்களா, சீனிவாச சாஸ்திரிகள் சாதியைக் கடந்து மகளையும் மருமகனையும் ஏற்றுக்கொண்டாரா என்பதைச் சொல்லி ‘இது நம்ம ஆளு’ என்பதை உணர்த்துவதுதான் படம்.

வாழைப்பழத்தில் ஊசி செருகுவது போல் என்பார்களே... அப்படி படம் நெடுக, சரவெடிகளைக் கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பார் பாக்யராஜ்.

கோபாலாக பாக்யராஜ். பானுவாக ஷோபனா. சீனிவாச சாஸ்திரிகளாக சோமயாஜுலு. பாக்யராஜின் பெற்றோராக... குமரிமுத்து - மனோரமா. கிருஷ்ணய்யராக கலைஞானம். படத்தில் இவர்கள்தான் மெயின் கேரக்டர்கள். இவர்களையும் சின்னச்சின்னதாக வருகிற கேரக்டர்களையும் வைத்துக்கொண்டுதான் திரி கிள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார் பாக்யராஜ்.

’இது நம்ம ஆளு’ மனோரமா - ஷோபனா
’இது நம்ம ஆளு’ மனோரமா - ஷோபனா

ஷோபனா தமிழில் நடித்த படங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமான படம் இது. சோமயாஜுலுவுக்கு ‘சங்கராபரணம்’ படத்துக்குப் பின்னர், அப்படியொரு கதாபாத்திரமாக, மனதில் மரியாதை கூடுகிற கேரக்டராக அமைந்த படம். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் குமரிமுத்துவுக்கு ‘இது நம்ம ஆளு’ ரொம்பவே ஸ்பெஷல். ஆச்சி மனோரமாவின் முத்திரைப் படங்களின் நீண்ட பட்டியலில், இந்தப் படமும் இடம்பெற்றிருக்கிறது.

ஊரிலிருந்து கிளம்பி வந்து, ஹோட்டல் முதலாளி பாலகுமாரனிடம் சாப்பிட்ட பில்லுக்கு கடிகாரத்தைக் கழற்றிக் கொடுப்பதிலிருந்தே தொடங்கிவிடுகிறது பாக்யராஜின் காமெடி சரவெடி. வயிற்றுப் பிழைப்புக்காக பிராமண வேஷம் போட்டுக்கொண்டு திருஷ்டி பூசணிக்காயை ஸ்டைலாகத் தாண்டிச் செல்வார். சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் கால்பந்து பறந்துவரும். அதைத் தன் தலையால் முட்டி விளையாடியபடி நடப்பார். ’பச்சைமலை சாமி ஒண்ணு உச்சி மலை ஏறுதுன்னு’ என்று பாடிக்கொண்டே உற்சாகமாக வருவார்.

ஓட்டு மேலிருந்து விழும் காய்ந்த மாலையை, வைகுந்த மாலை என்று பெருமிதம் கொள்வார். பஞ்சபாத்திரம், தூபக்கால், கோமியம் தெரியாமல் முழிப்பார். மந்திரத்தின் இறுதியில் ‘ஸ்வாஹ’ சொல்ல முடியாமல் திணறுவார். ‘இலை எடுத்துண்டு வா கோபால்’ என்று சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டு வாழை இலையை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட உட்கார்ந்துகொள்வார்.

முதல் பத்து இருபது நிமிடங்களில் வரும் இந்தக் காட்சிகளை ரசித்து, ‘கோபால் நம்ம ஆளு’ என்று சொல்லி, அந்தக் கதாபாத்திரத்துடன் நாம் கைகோர்த்துக் கொள்வோம்.

வேலை கிடைத்ததும், வைத்திருந்த தாடியை எடுத்துவிட்டு, மீசையெல்லாம் செதுக்கி, ‘சந்தையில மீனு வாங்கி மச்சான்’ என்று அக்ரஹாரத்தில் பாட்டுப்பாடியே வருவார். அக்ரஹாரத்துக்கு வந்த ரவுடிகளிடம் சண்டை போடுவார். சங்கீதம் தெரியும் என்பதாக அலட்டிக்கொள்வார். அம்மாவின் கண் ஆபரேஷனுக்குக் காசு கிடைத்தால் போதும் என்று ஷோபனாவிடம் இசைப் போட்டியில் பங்கேற்பார். ‘செண்பகப்பூ விரித்தே கண்ணன் சாமரம் வீசுகிறான்’ என்று ஷோபனாவின் அம்மாவுக்குப் பாட்டு சொல்லித் தருவார். இல்லாத அத்தைப் பெண்ணுக்கு இலவசமாகப் புடவை வாங்கி அதையும் விற்றுக் காசாக்கிவிடுவார். சமைப்பதாக பாவ்லா செய்து, கோயில் பிரசாதம் சாப்பிடுவார். சீனிவாச சாஸ்திரிகள் இருக்கும்போதே, விழுந்துவிட்ட ஒடுக்கப்பட்ட மக்களைத் தொட்டுத் தூக்கிவிடுவார். சிதறிக் கிடக்கும் மீன்களை எடுத்துக் கொடுப்பார். மீனின் வகைகளையும் சொல்வார்.

இடையே, ஷோபனாவின் காதலை ஏற்க முடியாமல் தவிப்பார். ஒருகட்டத்தில் காதல் தெரியவர, கல்யாணத்தில் முடியும். பொய்யான அப்பா, அம்மா. வீண் ஜபர்தஸ்தில் டுபாக்கூர் அப்பாவும் திருட்டு அம்மாவும் கண்டு மிரண்டுபோவார். உண்மையான பெற்றோரால் குட்டு வெளிப்பட, ‘பெண்ணைத் தொடமாட்டேன்’ என்று சத்தியம் செய்வார்.

ஊர்ப் பஞ்சாயத்தில், வாய் பேச முடியாத பெண்ணுக்கு நீதி கிடைக்க வாதாடுவார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், பிராமண வீட்டுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததையும் ஞானசம்பந்தர் சரிதத்தையும் ஒப்பிட்டு பஞ்சாயத்தில் பேசுகிற காட்சியில் கரவொலியால் தியேட்டரே குலுங்கியது. கோயில் குருக்கள் ஒருவர், தன் மகளின் திருமணத்துக்குத் திருடிய அம்பாள் நகையைத் தான் திருடியதாக ஏற்றுக்கொள்வார். மாமனார் சோமயாஜுலுவை அவமரியாதை செய்த தர்மகர்த்தா குழுவினரை வெளுத்தெடுப்பார்.

இது நம்ம ஆளு கதை வசனம்
இது நம்ம ஆளு கதை வசனம்

இறுதியில், சத்தியத்தை மீறுவதும் மனைவியுடன் கூடுவதும் தற்கொலைக்கு முயலும் சோமயாஜுலுவைக் காப்பாற்றுவதும், பின்னர், ஸ்ரீமடம், அன்பு இல்லமாக மாறுவதும் எல்லோரும் ஒன்றிணைவதும் என சுபம் போடுவார் பாக்யராஜ்.

கங்கை அமரன், எம்எஸ்வி, இளையராஜா, சங்கர் - கணேஷ் என்றெல்லாம் தன் படங்களுக்கு இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திய பாக்யராஜ், இந்தப் படத்தில் முதன்முதலாக இசையமைத்தார். ஏற்கெனவே, அமலாவுடன் நடித்து, பாதியிலேயே நின்றுபோன ‘காவடிச்சிந்து’ படத்துக்கு இசையமைத்து, கேசட் ரிலீஸ் செய்து, அந்தப் பாடல்களெல்லாம் ஹிட்டாகியிருந்தன. ஆனால், ‘இது நம்ம ஆளு’ படம் தான், பாக்யராஜ் இசையமைத்து திரைக்கு வந்த முதல் படம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம்... முதன்முதலாக ‘பச்சை மலை சாமி ஒண்ணு’ என்ற பாடலையும் பாடினார்.

பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ முதலான படங்களின் கதை விவாதங்களில் கலந்துகொண்ட எழுத்தாளர் பாலகுமாரன், இந்தப் படத்தை இயக்கினார். ’டைரக்‌ஷன் மேற்பார்வை: கே.பாக்யராஜ்’ என்று டைட்டிலில் போட்டிருப்பார். அதாவது, கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, டைரக்‌ஷன் மேற்பார்வை என்று பணிகளை பாக்யராஜ் செய்தார்.

ஷோபனாவின் நடிப்பும் சோமயாஜுலுவின் நடிப்பும் பிரமாதம். சோமயாஜுலுவின் தந்தையாக டி.கே.சுப்ரமணியம் நடித்திருந்தார். இவர் பூர்ணிமா பாக்யராஜின் தாத்தா. ஷோபனாவின் அம்மா ஜானகியின் நடிப்பும் கச்சிதம். குமரிமுத்து அசத்தியிருப்பார். மனோரமா அற்புதம் பண்ணியிருப்பார். முக்கியமாக, கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் அதுவரை இருந்த கலைஞானத்தை, நடிகராக அறிமுகப்படுத்தியிருப்பார் பாக்யராஜ். குசும்புக்கார கிருஷ்ணய்யராக நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் கலைஞானம்.

பாக்யராஜ், ஷோபனா
பாக்யராஜ், ஷோபனா

‘பச்சைமலை சாமி ஒண்ணு’, ‘அம்மாடி இதுதான் காதலா?’, ‘சங்கீதம் பாட கேள்விஞானம் அது போதும்’, ‘காமதேவன் ஆலயம்’, ‘நான் ஆளான தாமரை’ என்று படத்தின் எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. தவிர, கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘கண்ணுறங்கு’ என்ற பாடல் இருப்பதாக, யூடியூப் சொல்கிறது. ஆனால் படத்தில் இந்தப் பாடல் இல்லை.

சாதிப் பிரிவினையைப் பேசிய ‘இது நம்ம ஆளு’ படம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. ‘முந்தானை முடிச்சு’ எப்படியான வெற்றியைத் தந்ததோ... அப்படியொரு வெற்றியைச் சந்தித்தது.

படத்தில், நடிப்பில் முதல் மார்க் சோமயாஜுலுவுக்குத்தான். மனிதரைப் பார்த்தால், வணங்கத் தோன்றும். அப்படியொரு கம்பீரத் தோற்றம். கெளரவமே உருவான முகம். கருணையே கொண்ட கண்கள். க்ளைமாக்ஸில், அவரைக் காப்பாற்றிவிட்டு, பாக்யராஜ் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் பின்னே எரிந்துகொண்டிருக்கும் ஸ்ரீமடத்தின் ஓலையானது விழுந்துகொண்டே இருக்கும். பாக்யராஜுக்கும் அவருக்குமான அந்த அன்பு, மரியாதை, பிரியம் மிக அருமையாக, அற்புதமாக, ஆழமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

படத்தின் லொகேஷனும் ராஜ்பிரீத்தின் ஒளிப்பதிவும் அழகு. அதேபோல ஷோபனாவும் அவரின் மூக்குக் கண்ணாடியும் ரொம்பவே பாந்தமாக இருந்தது.

1988 ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியானது ‘இது நம்ம ஆளு’. படம் வெளியாகி இன்றுடன் 34 வருடங்களாகிவிட்டன. 1979-ல் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ மூலம் இயக்குநரான பாக்யராஜை, ‘மெளன கீதங்கள்’ படம் வெளியானபோதே, ‘இவர் நம்ம ஆளு’ என்று கொண்டாடத் தொடங்கிய மக்கள், மீண்டுமொரு முறை... ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலமாக இன்னும் பலமாகக் கொண்டாடினார்கள். படத்தை இன்றைக்கும் பார்த்து சிலாகிக்கிறார்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in