குழந்தைகளின் மகிழ்ச்சியான கல்விக்கு புதிய திட்டம்... கேரளாவில் அறிமுகம்!

வர்ணகூடாரம்  பாலர் பள்ளி
வர்ணகூடாரம் பாலர் பள்ளி

மாணவர்களின் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்தும் கேரளாவின் புதுமையான கல்வி முறைகள் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது என்று அம்மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜே.சிஞ்சுராணி கூறியுள்ளார்.

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் சித்தாராவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட வர்ணகூடாரம் என்ற பாலர் பள்ளியை புதன்கிழமை அமைச்சர் ஜே.சிஞ்சுராணி திறந்து வைத்தார். அப்போது இந்த திட்டத்தை மாநில அரசின் சாதனை என்று விவரித்த அவர், நவீன வசதிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் அதிக குழந்தைகள் சேருகிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,“வர்ணகூடரம் போன்ற திட்டங்கள் குழந்தைகளை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கும். இலவச உணவு, படிப்புக்கான உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நவீன வசதிகள் மூலம் நல்ல ஆரம்பக் கல்வியை உறுதி செய்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்

அமைச்சர் சிஞ்சுராணி
அமைச்சர் சிஞ்சுராணி

சமக்ரா சிக்‌ஷா கேரளாவின் ஸ்டார்ஸ் (மாநிலங்களுக்கான கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துதல்) திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவழித்து இந்த வர்ணகூடரம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பாலர் பள்ளியில் நான்கு அறைகள் உள்ளன. இதில் குழந்தைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த சூழலை வழங்குவதே நோக்கமாகும். தூங்கும் இடம் மற்றும் விளையாட்டு பகுதி தவிர, கணிதம், இசை, நாடகம், மொழி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிற்கு தனித்தனி பிரிவுகள் உள்ளன.

வர்ணகூடாரம் பள்ளியின் உட்புற தோற்றம்
வர்ணகூடாரம் பள்ளியின் உட்புற தோற்றம்

இந்த விழாவுக்கு சித்தாரா கிராம பஞ்சாயத்து தலைவர் எம்.எஸ். முரளி தலைமை வகித்தார், பள்ளி கலைவிழா பகுதியை தொகுதி ஊராட்சி வளர்ச்சி நிலைக்குழு தலைவர் கே.உஷா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தொகுதி பஞ்சாயத்து உறுப்பினர் எஸ்.அருண்குமார், பி.டி.ஏ., தலைவர் பி.கிரீஷ், தலைமையாசிரியர்.பி.ராஜூ, பணியாளர் செயலர் எஸ்.எஸ்.ஷெரின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in