குழந்தைகளுக்கு வாசிப்புத் திறனை அதிகப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ்

திட்டத்தை தொடங்கி வைக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
திட்டத்தை தொடங்கி வைக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ்"மாணவர்களின் வாசிப்பு திறன் தொடர் ஓட்டம்" என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை, கூகு்ள் நிறுவனத்தின் வழியே "ரீடிங் மாரத்தான்" - என்கிற புதிய திட்டத்தை இன்று முதல் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் "கூகுள் ரீடிங் அலாங்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தலாம்.

இந்த புதிய திட்டத்துக்கான துவக்கவிழா நிகழ்ச்சி திருச்சி அருகே திருவெறும்பூர் பகவதிபுரம் நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளித் தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்துதல் என்பதுதான். அந்த திட்டத்தை இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தொடர்ந்து நடத்த இருக்கிறோம். இல்லம் தேடி கல்வியில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் மையங்கள் உள்ளன. அதிலிருக்கும் தன்னார்வலர்களும் மொபைல் போனில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு படிக்கச் செய்வோம்" என்றார்.

மேலும், " குழந்தைகளை நூறு வார்த்தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை படிக்கச் செய்வோம். நான்கு கட்டமாக இதற்கு உரிய பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அப்படிப் படிக்கும்போது நுண்ணறிவு ஏற்படும். முழுமையாக படிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கூகுள் வாசிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்காக கதைகளோடு புகைப்படங்களும் இருப்பதால் படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் 12-ம் தேதி வரை இந்த வாசிப்பு திறன் பயிற்சி தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in