காக்கும் கார்த்திகைச் செல்வன் - 16

கந்தனின் திருத்தலங்கள் - 8.வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
வயலூர் முருகன்
வயலூர் முருகன்

திருச்சி மாநகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கௌமார வழிபாட்டுத் தலங்களுள் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. அருணகிரியார் போற்றிய தலமாக விளங்கும் இத்தலத்தில், முருகப் பெருமானே தன் வேலால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது. சிவபெருமானை முருகப் பெருமான் தெய்வானை, வள்ளியுடன் பூஜித்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையையும், தாயையும் முன்னிறுத்தி, தினமும் தாய் தந்தையர் காலில் பணிந்து பூஜைகள் செய்து அருள்பெற்ற பாலகராய் வயலூரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமான் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை அனைவருக்கும் வலியுறுத்துகிறார்.

தல வரலாறு

ஒருசமயம் சோழ மன்னர் ஒருவர் வயலூர் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் எடுத்ததால், பல இடங்களில் சுற்றி அலைந்தார். அப்போது ஓர் இடத்துக்கு வரும்போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பைக் காண்கிறார். தாகம் தீர்க்க வேண்டி அக்கரும்பை ஒடித்தபோது அதில் இருந்து குருதி கசிந்தது. அதிர்ச்சி அடைந்த அரசர், அக்கரும்பு விளைந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அதில் சிவலிங்கம் இருந்ததாகவும், பின்னர் அவரே அந்த இடத்தில் கோயில் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. ‘வயலிடை கண்ணுற்ற மூலவர்‘ என்பதால் வயலூர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

கோயில் சிறப்புகள்

வயலூர் தலம் சிவபெருமான் கோயிலாக இருந்தாலும் இங்கே முருகப் பெருமானுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் முருகப் பெருமானின் வாகனம் ‘தேவமயில்’ வடக்கு பக்கம் பார்த்து உள்ளது. பொதுவாக ஏனைய தலங்களில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கும் ஆதிநாயகி இத்தலத்தில் தென்முகம் பார்த்து இருப்பது தனிச்சிறப்பு.

ஏனைய தலங்களில் தாய் தந்தையரை, தனியாக இருந்தே முருகப் பெருமான் வழிபடுவார். இத்தலத்தில் வள்ளியுடன் இணைந்து பூஜைகள் செய்வார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

முருகப் பெருமான் விரும்பிய தலங்களுள் ஒன்றாக வயலூர் விளங்குவதால், திருப்புகழின் பெருமையில் வயலூர் பிரதான இடத்தை வகிக்கிறது. அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் திருமணக் கோல குமாரராகக் காட்சி அருளியதால் இத்தலத்தில் வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

சிவபெருமான் சந்நிதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டியின்போது முருகப் பெருமான் - தெய்வயானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகப் பெருமான் - வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். வள்ளி திருமணத்தின்போது முருகப் பெருமானுக்கு வேடன், கிழவன் போல் அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனை செய்யப்படும். தைப்பூச தினத்தில் அருகில் உள்ள 4 கோயில் மூர்த்திகளுடன் முருகப் பெருமான் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக அருள்பாலிப்பது வழக்கம்.

அருணகிரியார் திருப்புகழ் பாடுவதற்கு அருளிய முருகப் பெருமான் என்பதால் எழுத்துத் துறை மற்றும் கலைத் துறையில் சாதிக்க நினைப்பவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வழிபட்டால் வெற்றி பெறுவர் என்பது நம்பிக்கை.

வயலூர் முருகப் பெருமான் மீது அதிக ஈடுபாடு கொண்ட கிருபானந்த வாரியார், தனது ஒவ்வொரு சொற்பொழிவைத் தொடங்கும்போதும், “நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி சொற்பொழிவைத் தொடங்குகிறேன்” என்ற முன்னுரையோடு தொடங்குவார். அந்த அளவுக்கு வாரியாருக்கும், இத்தல முருகப் பெருமானுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு. இதனால் இக்கோயிலின் புகழ் மேலும் பரவியது.

ராஜகேசரி வர்மன், குலோத்துங்க சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தில் உள்ள ஆதிநாதர் (மூலவர்) தம்மை நாடி வரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும், அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.

வயலூர் முருகப் பெருமான் ‘ஏழ்தலம் புகர் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா’ என்று அருணகிரி நாதரால் திருவாவினன்குடியிலும் போற்றப்படுகிறார்.

பொய்யாப் பிள்ளையார்

திருவண்ணாமலையில் அருணகிரியாரை காப்பாற்றிய முருகப் பெருமான், ‘முத்தைத் திரு’ என அடியெடுத்துக் கொடுத்தார். அதன் பின்னர் அருணகிரியார் திருப்புகழ் ஏதும் பாடவில்லை. முருகப் பெருமானின் அருள் வேண்டி காத்திருந்தார் அருணகிரியார். இதைத் தொடர்ந்து அவரை வயலூருக்கு வருமாறு (அசரீரி) அழைத்தார் முருகப் பெருமான். மகிழ்ந்த அருணகிரியார் வயலூருக்குச் சென்றார்.

பொய்யாப் பிள்ளையார்
பொய்யாப் பிள்ளையார்

ஆனால், அங்கு அவருக்கு முருகப் பெருமான் தரிசனம் தரவில்லை. வருத்தமடைந்த அருணகிரியார், “அசரீரி பொய்யோ?” என உரக்கக் கத்தினார். அப்போது விநாயகர் அவர் முன் தோன்றி, “அசரீரி உண்மையே” என்று கூறி, அங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டி அருளினார். தனது வேலால் அருணகிரியாரின் நாக்கில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன் பின்னர், அருணகிரியார் இத்தல முருகனைப் போற்றி 18 பாடல்கள் அருளினார்.

அருணகிரியாருக்கு காட்சி தந்த ‘பொய்யா கணபதி’ விசேஷ மூர்த்தியாக கொண்டாடப்படுகிறார். கணபதியைப் போற்றி அருணகிரியார் திருப்புகழில் காப்புச் செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ அந்த அளவுக்கு பொய்யா கணபதி பொருளை சீராகக் கொடுப்பார் என்று அச்செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றி, தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருள்வதால், இவர் ‘பொய்யா கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனக் கூறப்படுகிறது. அருணகிரியாருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ஆனி மாத மூல நட்சத்திர தினத்தில் இவர் முருகப் பெருமானுடன் புறப்பாடாகிறார்.

சதுர தாண்டவ நடராஜர்

பொதுவாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜர் இத்தலத்தில் மாறுபட்டு, காலைத் தூக்காத கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோலம் நடனமாடுவதற்கு முந்தைய நிலையாக கருதப்படுகிறது. அதனால் இவரது சடாமுடி முடியப்பட்ட நிலையில் இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் காணப்படவில்லை. ‘சதுர தாண்டவ நடராஜர்’ என்று அழைக்கப்படும் இவருக்கு மார்கழி திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கிருபானந்த வாரியாரின் திருப்பணி

முருக பக்தரான கிருபானந்த வாரியார் 1934-ம் ஆண்டு இத்தலத்துக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்வித்தார். இதில் மகிழ்ந்த வாரியார், கோயில் காணிக்கையாக 50 பைசா அளித்துள்ளார். அன்றிரவு கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகப் பெருமான், “இந்த ஐம்பது பைசாவை காணிக்கையாக பெற்றிருக்கிறாயே... இதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?” என்று கேட்டுள்ளார். இதைக் கண்டு வியந்த நிர்வாகி, மறுநாள் காலை அந்த ஐம்பது பைசாவை வாரியாரிடம் திரும்பி அளித்துவிட்டார். பின்னர் நடந்தவற்றை அறிந்த வாரியார், இக்கோயிலுக்கு கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்திக் கடன்

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், இத்தல தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை நீராடி, சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நோய் நீங்க, துன்பம் நீங்க, குழந்தை வரம் பெற, ஆயுள் பலம் பெருக, கல்வி, அறிவு, செல்வம், விவசாய செழிப்பு ஏற்பட இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

முடி இறக்கி காது குத்துதல், காவடி, பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், அங்கப்பிரதட்சணம் (ஆண்கள்), அடிப்பிரதட்சணம் மற்றும் கும்பிடு தண்டம் (பெண்கள்) ஆகிய நேர்த்திக் கடன் செலுத்தி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இங்கு சண்முக வேள்வி, சண்முகார்ச்சனை உள்ளிட்டவையும் செய்வதுண்டு. கார்த்திகை விரதம் இருத்தல், அன்னதானம் செய்தும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் குழந்தையை தத்துக் கொடுக்கும் பரிகாரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் இல்லை, சரியாக சாப்பிடவில்லை, இரவில் பயந்து நடுங்கி அழுதவண்ணம் உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானிடம், “இனி இந்தக் குழந்தை உன் குழந்தை” எனக் கூறி தத்துக் கொடுத்து பரிகாரம் செய்கின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்து குழந்தையை அழைத்துச் சென்றால், இனி அவர்கள் ஆரோக்கியமாக இருப்பர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா (12 நாள்), கந்த சஷ்டி சூரசம்ஹாரத் திருவிழா (7 நாள்), பங்குனி உத்திரத் திருவிழா (4 நாள்), தைப்பூசத் திருவிழா (3 நாள்) இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் நடைபெறும் சட்டத் தேர்விழாவுக்கு எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருவதுண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in