சென்னை வட பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை வட பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா காலை விமரிசையாக தொடங்கியது.
வழியெங்கும் பக்தர்களின் 'அரோகரா... அரோகரா...’ கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேள தாளம் முழங்க பக்தர்கள் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து தேரில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியை வழிபட்டனர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு முருக பக்தர்களால் கோயில் வளாகம் களைகட்டியது. பக்தர்களுக்கு ஆன்மிக அன்பர்கள் மோர், குடிநீர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு வட பழனி போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயில் நிலையை அடைந்தது. இதில் சென்னையை சுற்றி உள்ள ஏராளமான முருக பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.