அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களை ஒரே நாளில் வழிபடும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்  சிறப்பு சுற்றுலாப் பேருந்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

கும்பகோணத்தை மையமாக வைத்து  நவக்கிரக தலங்கள் உள்ளன. மக்கள் பரிகாரங்களுக்காக நவக்கிரக தலங்களுக்கு வருகின்றனர். அத்துடன் அருகில் உள்ள ஆலயங்களுக்கும் செல்கின்றனர். இதற்காக பேருந்து, ஆட்டோ, கார் மூலம் பயணம் செய்வதால் அதிக செலவாகிறது.

அதனால் கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 

அதை ஏற்று, நவக்கிரக சுற்றுலா சிறப்பு பேருந்து இயக்கம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை ஆறு மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நவக்கிரக சிறப்பு சுற்றுலாப் பேருந்தை  அமைச்சர் சிவசங்கர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்பதிவு செய்திருந்த 52 பயணிகளுக்கும் சால்வை அணிவித்து அவர் வரவேற்றார்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்

வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் முன்பதிவு செய்த பயணிகளுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்து, முதலில் திங்களூர் சந்திரன்கோயில்,  அதைத் தொடர்ந்து ஆலங்குடி குரு பகவான் தரிசனத்துக்கு பயணிகளை இறக்கிவிடும்.

அடுத்து, காலை உணவு இடைவேளைக்குப்  பிறகு, காலை 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், 10 மணிக்கு சூரியனார்கோவில் சூரிய பகவான் தரிசனம், 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோயில் தரிசனம், 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் கிரக தரிசனத்துக்கு பயணிகள் இறக்கி விடப்படுவார்கள். பிற்பகல் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளையாகும்.

வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில்

பிற்பகல் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோயில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழபெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், 4.45 மணிக்கு திருநள்ளாறு சனி பகவான் கோயிலுடன் தரிசனம் நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்குள் பேருந்து மீண்டும் கும்பகோணம் வந்தடையும்.

நவக்கிரக சுற்றுலாவுக்கு பயணக் கட்டணம் ரூ.750.  பேருந்தில் பயணிக்க அரசு போக்குவரத்து கழக செயலி அல்லது  www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், "பயணிகளின் தேவைக்கு ஏற்ப  சிறப்பு பேருந்துகள் அதிகம் இயக்கப்படும்" என்றும்,  "இதே போல முருகனின் அறுபடை வீடுகளுக்கும்  சோதனை முறையில் பேருந்துகள் இயக்க  நடவடிக்கை எடுக்கப்படும்"  என்றும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in