புரட்டாசி மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 17ம் தேதி திறக்கப்பட்டு 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.
பின்னர், செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.
செப்டம்பர் 22ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.