காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக, கோவையில் இருந்து இன்று அடுத்த சிறப்பு ரயில் 90 பயணிகளுடன் புறப்பட்டது.
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சிறப்பு ரயில்கள் மூலம் சென்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்தும், இரண்டாவது ரயில் கோவையிலிருந்தும் புறப்பட்டுச் சென்றது.
அந்த வகையில் மூன்றாவது ரயில் இன்று கோவையில் இருந்து அதிகாலை புறப்பட்டது. காலை ஐந்து மணிக்குக் கிளம்பிய இந்தச் சிறப்பு ரயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 90 பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.