கும்பகோணம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது பெண் ஒருவர் குண்டத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். குண்டம் திருவிழாவை ஒட்டி தீயணைப்பு துறையினர், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியான தவமணி என்பவர் குண்டத்தில் இறங்கினார்.
கடும் வெப்பம் காரணமாக அவர் திடீரென குண்டத்திலேயே தவறி விழுந்தார். உடனடியாக பாதுகாப்பிற்கு நின்றிருந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டம் திருவிழாவில் பங்கேற்று, தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இதையும் வாசிக்கலாமே...
தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்
மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!
பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!