பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்தது 'கோவிந்தா' முழக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஆற்றில் இறங்கிய அழகர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஆற்றில் இறங்கிய அழகர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

‘கோவிந்தா’ முழக்கம் விண்ணதிர பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். தமிழகத்தில் இருந்து திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.

சித்திரைத் திருவிழாக கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. இதையடுத்து மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக்கு விஜயமும் நடந்தன. இதன் தொடர்ச்சியாக மீனாட்சியம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம், நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற காட்சி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற காட்சி.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கிப் புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரை நகரில் உள்ள மூன்றுமாவடிக்கு வந்தார்.

கள்ளழகர் எதிர்சேவை: விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகர்!
கள்ளழகர் எதிர்சேவை: விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகர்!

அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சியடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.

தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இதன்பின் அதிகாலை 6 மணி அளவில் மதுரை - ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணதிர கிளம்பியது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சியைக் காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர். இதனால் மதுரை நகர் திருவிழா கோலம் பூண்டுள்ளது. வரும் 27-ம் தேதி அன்று கள்ளழகர் அழகர்கோவிலுக்குத் திரும்புகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in