நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

மகாமக குளத்தில் நீராடும் பக்தர்கள்
மகாமக குளத்தில் நீராடும் பக்தர்கள்

நாளை மாசி மகம். மாசி மகத்தன்று புத்தாடை தானம் தந்து, பசியில் வாடுபவர்களுக்கு உணவு வழங்கினால் தனம் பெருகும். குடும்பத்தில் பெரியவர்களை நமஸ்கரித்து அவர்களின் ஆசி பெறுவது சுபிட்சம் தரும்.

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் நிறைந்திருக்கும் நாளில் தானங்கள் செய்து, புனித நதிகளில் நீராடுவதால் நம் மனதில் இருந்த குழப்பமும் தேவையற்ற பயமும் நீங்கும். நம் இல்லத்தில், மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும்.

பொதுவாகவே மாசி மாதத்தில் நாம் செய்யும் சடங்குகளும் வழிபாடுகளும் அதிக வலிமையைக் கொடுக்கும். மாசி மாதத்தில் உபநயனம், காது குத்துதல், கிரகப்பிரவேசம், புதிய தொழில் தொடங்குதல் என எது செய்தாலும் விருத்தியாகும். அதனால்தான், மாசி மாதத்தை மகிமை மிக்க மாதம் என்கிறார்கள்.

மாசி மாதத்தில் நாம் செய்யும் சிவ வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு, அம்மன் வழிபாடு, முக்கியமாக மகாலக்ஷ்மி வழிபாடு பன்னிரெண்டு மாசி மாதத்தில் செய்த பூஜைகளுக்கான பலன்களைக் கொடுக்கும். நம் சந்ததியினருக்கும் அந்தப் புண்ணியங்கள், பலன்களாகப் போய்ச் சேரும்!

கும்பகோணம் மகா மக குளtத்தில் பக்தர்கள்
கும்பகோணம் மகா மக குளtத்தில் பக்தர்கள்

மாசி மாதத்தில், மகம் நட்சத்திர நாளை மாசி மகம் என்று போற்றுகிறோம். இந்தநாளில், புனித நீராடுவது விசேஷம். கங்கை, காவிரி, பவானி, தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் நீராடுவது நம் முன் ஜென்ம பாவங்களைப் போக்கவல்லவை. புனித நதிகளில் நீராடி, நம் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், முன் ஜென்ம வினைகள் தீரும். வாழ்க்கையில், நம் ஜாதக ரீதியாக இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.

மாசி மகம் என்றதுமே நமக்கு கும்பகோணம் மகாமகக் குளம் நினைவுக்கு வரும். இந்தக் குளத்தில் நீராடுவதற்கு முன்னதாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

கும்பகோணம் மகாமக குளம்
கும்பகோணம் மகாமக குளம்

நாம் எந்தவொரு சடங்கு சாங்கியங்களைச் செய்வதாக இருந்தாலும் முன்னதாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் முதலானவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக, எத்தகைய பலன் வேண்டும் என்பதற்காகப் பூஜையைச் செய்கிறோமோ அதற்கு உரிய வேண்டுகோளை கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து தொடங்க வேண்டும். இதையே சங்கல்பம் என்கிறோம்!

கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவதற்கு முன்னதாக, காவிரித்தாயை நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு பிறகு, நீராட வேண்டும்.

மகாமகக் குளம் என்றில்லாமல் உலகின் எந்த பகுதியில் வசித்தாலும், நம் வீட்டிலேயே குளிக்கும் தண்ணீரை, கங்கையாகவும், காவிரியாகவும் புண்ணிய நதியாகவும் பாவித்து நீராட வேண்டும். நம் எண்ணத்திற்கு அத்தனை வலிமையுள்ளது. அதனால் தான் தீபாவளி திருநாளிலும், நம் வீட்டில் குளித்தாலும், ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்கிறார்கள். அப்படியான சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு, நீராடிய பிறகு, குலதெய்வ வழிபாட்டையும், இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளவேண்டும். மாசி மகம் எனப்படும் புண்ணிய நாளில், நம்மால் முடிந்த தானங்களைச் செய்யவேண்டும்.

மாசி மகத்தன்று பசு, பூமி அல்லது தானியங்கள், ஆபரணங்கள், உணவு முதலானவற்றை அந்தக் காலத்தில் தானமாக வழங்கினர் என்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள். இளநீர் ஓடு அல்லது பூசணிக்காயில் துளையிட்டு அந்தத் துளைக்குள் நவரத்தினங்களை இட்டு நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், நம் தகுதிக்கேற்ப, குடை, உடை, போர்வை, காலணி, தானிய வகைகள், பழங்கள், அன்னதானம் என பயனுள்ளவற்றைத் தானமாக வழங்கலாம். மாசி மகத்தன்று தானம் செய்தால் தனம் பெருகும் என்பது ஐதீகம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in