தலைவர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: சென்னை நபர் கைது

தலைவர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: சென்னை நபர் கைது

அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சென்னை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை 134 வது வார்டில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்று அப்பகுதி மக்களிடம் கருத்துகேட்பு நிகழ்ச்சி நடத்தியது. அப்போது பேசிய நபர் ஒருவர் பெரியார், அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வென்ற 134வது வார்டில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு வீடியோ ஒன்று யூடியூப்பில் வந்ததாகவும், அந்த வீடியோவில் பேசிய ஒருவர் அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார், வீடியோவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீடியோவில் பேசிய நபர் அசோக் நகரை சேர்ந்த ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸார் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் மீது கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இன்று கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in