பஞ்சாப்பில் சீக்கியர்களின் புனித நூலான கிரந்த் சாஹிப்பின் பக்கங்களை கிழித்த இளைஞரை பொதுமக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள குருத்வாராவில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் சில பக்கங்களைக் கிழித்ததாகக் கூறி 19 வயது இளைஞன் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பந்தலா கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
பக்சிஷ்சிங் என்ற அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், குருத்வாரா வளாகத்திற்குள் நுழைந்து, புனித நூலின் சில பக்கங்களைக் கிழித்து விட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பக்சிஷ்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சந்தர் சமிதியின் தலைவர் லக்வீர் சிங் போலீஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 ஏ- பிரிவின் கீழ் பக்சிஷ்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பக்சிஷ்சிங் தந்தை லக்விந்தர் சிங் கூறுகையில், "எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்காக இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். எனது மகனுக்கு எதிராக காவல் துறையின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. எனது மகனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றுகூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறை கண்காணிப்பாளர் சவுமியா மிஸ்ரா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அடித்துக் கொலை செய்யப்பட்ட பக்சிஷ்சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருத்வாராவில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பஞ்சாப்பில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.