வன்கொடுமை வழக்கிற்குப் பயந்து இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணத்தை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் கலபுர்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் கமலாபூர் தாலுகாவில் லடமுகலி கிராமத்தைச் சேர்ந்தவர் நிகில் பூஜாரி(23). கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல் வெடித்தது.
இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது திருவிழாவிற்குப் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீஸார், தகராறில் ஈடுபட்ட இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களையும் கிராம மக்கள் முன்னிலையில் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதன் பின் கிராம மக்கள் முன்னிலையில் இரண்டு சமூக இளைஞர்களைக் கொண்ட சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த் இளைஞர்கள் நிகில் பூஜாரி மற்றும் பலர் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக நரோனா காவல் நிலையத்தில் நிகில் பூஜாரி உள்பட பலர் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் பயந்து போன நிகில் பூஜாரி, லடமுகலி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்று நிகில் பூஜாரி உடலை மீட்டு கலபுர்கிக்கு கொண்டு வர முயன்றனர்.
அத்துடன் நடுரோட்டில் நிகில் பூஜாரி உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வழியே சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து அவர்களைச் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள், லடமுகலி கிராமத்திற்கு நிகில் பூஜாரி உடலைக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கமலாபூர் தாலுகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!
காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா... அதிர வைக்கும் பின்னணி காரணம்!
ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!