திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவியை அவரது தாய்மாமன் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா(18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
ஜீவிதாவின் தாய் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35) தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார். மாணவி ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரண்ராஜ் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என தெரியவந்ததால் தனது மகள் ஜீவிதாவை, திருமணம் செய்து கொடுக்க ஜெயப்பிரதா மறுத்துள்ளார். இதனால், கடந்த ஒரு வாரமாக சரண்ராஜ் ஜீவிதாவை பின் தொடர்ந்த நிலையில், ஜீவிதா பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பிச் சென்றார்.
தகவல் அறிந்து வந்த போலீஸார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து சரண்ராஜை தேடி வந்தனர். இந்நிலையில் நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.