திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், ஒரு மாதத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியை சேர்ந்த யுவசங்கர் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த நவீனா (21) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பரேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் இருவரும் கடந்த மாதம் 20ம் தேதி வேலைக்கு சேர்ந்து, அங்கேயே தங்கி பராமரிப்பு பணி செய்து வந்தனர்.
இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் சொந்த ஊர் செல்வதற்காக யுவசங்கர் தனது மனைவி நவீனாவுடன் வீட்டின் பின்புறமாக பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முயல்பண்ணை அருகே அமைந்துள்ள தரை கிணற்றில் கால் தவறி யுவசங்கர் விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த நவீனா முயல் பண்ணை உரிமையாளர் கோபியிடம் தகவல் தெரிவித்தார். அவர் தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவாலங்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தேடும் பணியை தொடங்கிய தீயணைப்பு வீரர்கள், 8 மணி நேர போராட்டத்திற்கு பின் யுவசங்கர் உடலை வீரர்கள் மீட்டனர். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.