கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

உயிரிழந்த மகாலட்சுமி
உயிரிழந்த மகாலட்சுமி

சென்னையிலிருந்து கோவை வந்த தனியார் சொகுசுப்பேருந்தின் படுக்கையில், இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி. இவர் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மகாலட்சுமி, செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார். பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை பேருந்து நின்ற பிறகும் இறங்கவில்லை.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

இறுதியாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூற சென்றபோது அவர் எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த அவர்கள், 108 ஆம்புலன்சிற்கு தகவலளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

கோவை காட்டூர் காவல் நிலையம்
கோவை காட்டூர் காவல் நிலையம்

தகவலறிந்து வந்த காட்டூர் காவல்நிலைய போலீஸார், இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதேனும் சதிச்செயல் காரணமாக உயிரிழந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in