சென்னையில் காதல் திருமணம் செய்த பெண் 6 மாதத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி (19), ஆட்டோ ஓட்டுநரான வடிவேல் (33) ஆகிய இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு ராஜேஸ்வரிக்கும், வடிவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், திருமணமான 6 மாதத்திலேயே கணவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாயே என்று மகளை அவரது தந்தை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, வீட்டிற்கு அருகே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். மீனவர்கள் உதவியுடன் ராஜேஸ்வரியை மீட்டு, அவரது தந்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, ராஜேஸ்வரியின் அண்ணன் ராஜேஷ் (25) தனது நண்பர்களுடன் வடிவேல் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் தலையில் வெட்டி இடது கையை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அக்கம் பக்கத்தினர் வடிவேலுவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வடிவேல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தப்பிச்சென்ற ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.