காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

ஆசிட்
ஆசிட்

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கிருஷ்ணாபுரம் கிழக்கு கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர்பூவரசன். இவரும் கந்தனேரி அருகே கழனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பூவரசனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இருவரும் பூவரசன் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், தனது நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்துச்செல்லுமாறு ஐஸ்வர்யா, பூவரசனிடம் நேற்று முன்தினம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தனக்கு வேலை உள்ளதாகக்கூறி இரவு வீட்டை விட்டு பூவரசன் வெளியே சென்று விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா தனது அறையில் தூக்குப் போட்டுள்ளார். பூவரசன் வீடு திரும்பிய உள்ளே சென்று பார்த்த போது ஐஸ்வர்யா தூக்கில் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ஆம்புலன்ஸை வரவழைத்த பூவரசன், ஐஸ்வர்யாவை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி மூன்றே மாதங்களில் தனது காதல் மனைவி உயிரிழந்த வேதனையை தாங்க முடியாத பூவரசன் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யாவின் உடலை சுற்றிச்சுற்றி வந்து கதறி அழுதார். பின்னர் தான் கழிவறைக்கு செல்வதாக உறவினர்களிடம் தெரிவித்துவிடுச்சென்ற அவர் நீண்ட நேரமாக வரவில்லை.

அப்போது பூவரசன் கழிவறையில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். எனினும் பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒருவர் பின் ஒருவராக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in