
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் (65) என்பவர் அவரது சகோதரர் மாசிலாமணியிடம் இருந்து 2 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் கோரி மதியழகன் பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் (42) விண்ணப்பித்தார்.
பட்டா மாறுதல் வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என விஏஓ சுதா கேட்டுள்ளார். இதையடுத்து மதியழகன், விஏஓ சுதா குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தாா்.
அதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்படி மதியழகன் ரசாயன பவுடர் தடவிய 6 ஆயிரம் ரூபாயை பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கினார். பணத்தை அவர் பெற்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சுதாவை கையும், களவுமாக கைது செய்தனர்.
அதைத் தொர்ந்து சுதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.