
மகாராஷ்டிராவில் 36 வயது பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அவரது லைவ் இன் பார்ட்னர் மற்றும் பெண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிராமாநிலம், தானே மாவட்டத்தின் உள்ள பிவாண்டி நகரில் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
அங்கு இன்று காலை வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சமையல் அறையில் ஒரு பெண் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விசாரணை நடத்தினர். அப்போது கணவரை விவகாரத்து பெற்ற 36 வயது பெண் 11 மாதங்களாக இந்த வீட்டில் லைவ் இன் பாட்னருடன் வாழ்ந்தது தெரிய வந்தது. அத்துடன் பெண் தோழியும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலையின் பின்னணியில் லைவ் இன் பார்ட்னர் மற்றும் பெண் நண்பரின் பங்கு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
பெண் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தானே மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.