வாட்ஸ்-அப்பில் தன்னை ப்ளாக் செய்த காதலன் வீட்டில் இளம் பெண் தற்கொலை!

முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்
வாட்ஸ்-அப்பில் தன்னை ப்ளாக் செய்த காதலன் வீட்டில் இளம் பெண் தற்கொலை!

மும்பை அருகே, வாட்ஸ்-அப்பில் தன்னை ப்ளாக் செய்த காதலன் வீட்டுக்குச் சென்று இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனினும், இந்தச் சம்பவத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மும்பையின் புறநகர்ப் பகுதியான தஹிசர் பகுதியில், ரயில்வே இருப்புப்பாதை அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் 27 வயது இளைஞரும், 20 வயதான பிரணாலி லோகரே எனும் பெண்ணும் காதலித்துவந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றுவந்தனர். அப்போது அந்த இளைஞரின் வீட்டில் தங்குவதற்கு அந்தப் பெண் விருப்பம் தெரிவித்ததாகவும், அதை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இதையடுத்து தன் வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண், தனது காதலரை அழைத்து அவரது வீட்டுக்கு வர விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் போதைக்கு அடிமையானவர்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிவார்கள் என்பதால் வீட்டுக்கு வர வேண்டாம் என அந்த இளைஞர் கூறியிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண்ணின் எண்ணை வாட்ஸ்-அப்பில் அந்த இளைஞர் ப்ளாக் செய்திருக்கிறார்.

எனினும், தன் காதலரின் வீட்டுக்கு நேரில் சென்ற அந்த இளம் பெண் வாட்ஸ்-அப்பில் தனது எண்ணை ப்ளாக் செய்தது ஏன் எனக் கேட்டிருக்கிறார். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில், அப்பெண் அன்றிரவு அங்கேயே தங்கியிருக்கிறார். காலையில், அந்த இளைஞர் எழுந்து பார்த்தபோது அப்பெண் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இளைஞர் கொடுத்த முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீஸார், எதிர்பாராத வகையில் நேர்ந்த மரணம் (ஏடிஆர்) எனும் பிரிவில் இந்த வழக்கைப் பதிவுசெய்திருக்கின்றனர். எனினும், தற்கொலைக் கடிதம் எதுவும் சிக்காததால் இந்தச் சம்பவத்தில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in