20 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நட்பில் விரிசல்... திருநங்கையை கொலை செய்த பெண் கைது!

கைது செய்யப்பட்ட பிரேமா, கொலை செய்யப்பட்ட மஞ்சுநாயக்.
கைது செய்யப்பட்ட பிரேமா, கொலை செய்யப்பட்ட மஞ்சுநாயக்.

வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட திருநங்கையை கொடூரமாக கொலை செய்த தோழியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள முருகேஷ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மே 3-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஜீவன் பீமா நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், துர்நாற்றம் வீசிய வீட்டில் சோதனையிட்டனர்.

பெங்களூரு
பெங்களூரு

அப்போது அந்த வீட்டில் திருநங்கையின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த உடலைப் பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அத்துடன் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் திருநங்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினார். அப்போது கொலை செய்யப்பட்டவர் மஞ்சிபாய் என்ற மஞ்சுநாயக்(47) என்பது தெரிய வந்தது. கணவரை இழந்த பிரேமா என்ற பெண்ணும், திருநங்கை மஞ்சுநாயக்கும் கடந்த 20 ஆண்டுகளாக முருகேஷ் பாளையத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். அத்துடன் பல்வேறு இடங்களில் அவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது. பிரேமாவிற்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாக மஞ்சுநாயக் சந்தேகமடைந்தார். அதனால், அவர் பிரேமாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ஏப்ரல் 26-ம் தேதி பிரேமாவிற்கும், மஞ்சுநாயக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரேமாவை மஞ்சுநாயக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளார்.

ஆனால், அவரிடமிருந்து தப்பிய பிரேமா, வீட்டில் இருந்த டவலால் மஞ்சுநாயக்கின் கழுத்தில் சுற்றி அவரை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரேமாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்தேகம் கொலை வரை சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in