
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்த கணவரையும், அவதூறாக பேசிய மாமியாரையும், வீடுபுகுந்து மருமகள் அடித்து துவைத்த சம்பவம் சேலம் அருகே அரங்கேறி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல், ஆறகளூர் கிராமத்தை சேர்ந்த கருணைக்கடல் என்பவரின் மகன் செந்தில்குமாருக்கும், ஆத்தூர் நேரு நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அபிராமிக்கும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளில் மனைவி அபிராமியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த செந்தில்குமார் வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
2018 ம் ஆண்டு ஊர் திரும்பிய செந்தில்குமார், மனைவியை அழைத்துச்சென்று தனிக்குடித்தனம் நடத்தினார். அப்போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை மீண்டும் தாய் வீட்டுக்கு அனுப்பிய செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இதனிடையே மனைவியிடம் விவாகரத்து கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செந்தில்குமார் குடும்பம் நடத்துவதாக மனைவி அபிராமிக்கு தெரியவந்தது.
இதையடுத்து நேற்று கணவர் வீட்டுக்கு வந்த அபிராமி வீட்டுக்குள் இருந்த இரண்டாவது மனைவியை முதலில் அடித்துள்ளார். அதையடுத்து அங்குவந்து தனது நடத்தை குறித்து அவதூறாக பேசிய மாமியாரையும் புரட்டி எடுத்தார். கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய அபிராமியை தடுக்க வந்த கணவர் செந்தில்குமாருக்கும் அடி விழுந்தது. அடி தாங்காமல் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்ற மூன்று பேரும் வெளியே இருந்தவாறு சத்தம் போட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது இன்னொரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்று அபிராமி கேட்டார். அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் வந்திருந்து நியாயம் கேட்டனர். சிறிது நேரம் கழித்து ஆவேசம் அடங்கி அபிராமி வீட்டு வாசலில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார், வீடுபுகுந்து தாக்குதல் மற்றும் சட்டவிரோத திருமணம் என இருதரப்பு புகார்களையும் பெற்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.