'மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது?'

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
'மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை  ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது?'

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020 - 21- ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார், கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,” தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “ இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டைகள் எழுந்ததால் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை” என்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதி, “ஓய்வுபெற்ற மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜனுக்கான ஓய்வூதியப் பலன்களை நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல, "இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும்" என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” கரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டு கலந்தாய்வுகளில் இடங்கள் நிரம்பாததால் தகுதி அடிப்படையில் மணவர் சேர்க்கை நடத்த தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த முடிவு தனிப்பட்ட முறையில் செல்வராஜன் எடுக்கவில்லை” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வுக்குழு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தாதது ஏன் எனவும், கலந்தாய்வு நடத்தாமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாகவும் தேர்வுக்குழு செயலரின் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

பணி நீட்டிப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில், தேர்வுக்குழு செயலாளராக செல்வராஜன் பதவியில் தொடர்ந்துள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தீவிரமான இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது? உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in