தமிழக சிறைகளில் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளில், சிலரை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி விளக்கமளித்தார். அதில், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுதொடர்பான உள்துறை செயலாளரின் கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜராயிருந்த வழக்கறிஞர் டாக்டர் மனோகர், தமிழக அரசின் பரிந்துரைக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை எனக் கூறியதோடு. இந்த பரிந்துரையையும் ஆளுநர் மேலும் தாமதமே செய்வார் என குற்றம்சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆளுநரின் முடிவு என்ன என்பது குறித்து தெரிந்த பின்பு வழக்குகளை முடிவு செய்யலாம் எனக்கூறி வழக்கின் விசாரணையை செப்.29-ம் தேதி ஒத்திவைத்தனர்.