விருதுநகர் பாலியல் வழக்கு: 4 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

விருதுநகர் பாலியல் வழக்கு: 4 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

விருதுநகரில் காதலிப்பதாகக் கூறிய இளைஞருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி 8 பேர் ஒரு பெண்ணை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அப்பெண்ணின் காதலன் ஹரிகரன், மாடசாமி, ரவி, ஜூனத் அகமது உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் 4 பேர் மைனர்கள் என்பதால் மதுரையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சட்டப்பேரவையிலும் எதிரொலித்ததால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

அதனடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கைதான 4 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீஸார், அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிகரன், மாடசாமி, ரவி, ஜூனத் அகமது ஆகிய 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி, கைதான 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in