ராஜஸ்தானில் தலையில் கம்பத்தை வைத்து நடனமாடிய பெண் நடனக்கலைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் உள்ள மைதானத்தின் நடுவே தலையில் கம்பத்தை வைத்து ஒரு பெண் நடனக்கலைஞர் ஆடிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் அவர் நடனத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவருக்கு அருகில் ஒரு பெண்ணும், சிறுவனும், மற்றொருவரும் உற்சாகமூட்டிக் கொண்டிருந்தனர்.
தலையில் கம்பத்தை வைத்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்த பெண் கலைஞர் நகர்ந்து மைதானத்தின் நடுவே சென்றார். அப்போது திடீரென அவர் தலையில் இருந்த கம்பம், மின்சாரக் கம்பியில் பட்டதும், சட்டென பெண் நடனக்கலைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார். ஏராளமானோர் கண் முன்பு பெண் நடனக்கலைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
11 கிலோ-வோல்ட் கம்பியில் அவர் வைத்து ஆடிய கம்பம் தட்டியதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. உயிரிழந்த பெண நடனக்கலைஞரின் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்த போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.