மாணவிக்கு பாலியல் தொல்லை... தாய் ஆசிட் வீசி கொலை... உயிருக்கு போராடும் தந்தை: இளைஞர்கள் வெறிச் செயல்

மாணவிக்கு பாலியல் தொல்லை... தாய் ஆசிட் வீசி கொலை... உயிருக்கு போராடும் தந்தை: இளைஞர்கள் வெறிச் செயல்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள், அவரின் தாயாரை ஆசிட் வீசி கொலை செய்துள்ளனர். தந்தை உயிருக்குப் போராடி வருகிறார். இந்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, சில இளைஞர்கள், மாணவியின் வீட்டு வாசலில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை மாணவியின் தந்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிக்கு, அந்த இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, மாணவியின் தந்தை அங்குள்ள அரசியல்வாதிகளை அழைத்து வந்து காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தங்கள் மீது பதியப்பட்டுள்ள புகாரை வாபஸ் வாங்கும்படி மாணவியையும், அவரது தந்தையையும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டிலுக்கு மாணவியின் குடும்பத்தினர் அடிபணியவில்லை. இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினரை கொலை செய்ய இளைஞர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். நேற்று இரவு பீப்பாயில் ஆசிட்டை எடுத்து வந்த இளைஞர்கள், மாணவியின் வீட்டு ஜன்னல் வழியாக ஒரு அறையில் கொட்டியுள்ளனர். அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணவியின் தாயும், தந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மாணவி வந்து பார்த்தபோது, தாயும் தந்தையும் ஆசிட்டில் வெந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவியின் தாயார் உயிரிழந்தார். தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞர்கள் 6 பேரை கைது செய்தனர். இதனிடையே, உடனடி நடவடிக்கை எடுக்காத குற்றத்துக்காக காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை பிலிபிட் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மீதும் இளைஞர்கள் ஆசிட் வீசிய கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in