மதம் மாற எதிர்ப்பு தெரிவித்தவரை கோவையில் சுட்டுக்கொல்ல திட்டம்

வசமாக சிக்கியது வாட்ஸ் அப் குழு
மதம் மாற எதிர்ப்பு தெரிவித்தவரை
கோவையில் சுட்டுக்கொல்ல திட்டம்

மதம் மாற எதிர்ப்பு தெரிவித்தவரை சுட்டுக்கொலை செய்ய வாட்ஸ் அப்பில் சதிதீட்டம் தீட்டியது தொடர்பாக 5 பேரை கோவை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் அருண்குமார் (28). இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கரோனா பேரிடரால் 7 மாதங்களாக கோவையிலிருந்து பணியாற்றி வருகிறார். இவர் ஐதராபாத்தில் பணியாற்றிய போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரைச் சேர்ந்த சஹானாவுடன் காதல் ஏற்பட்டது. அருண்குமார் வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசிக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு, இஸ்லாமியரான சஹானா இந்து மதத்திற்கு மாறியதாக தெரிகிறது. இதற்கு சஹானாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அருண்குமாரை மதம் மாறச்சொல்லி அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அருண்குமாரின் தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரைச் சுட்டுக் கொல்ல சஹானாவின் உறவினர்கள் வாட்ஸ்அப் குழுவில் விவாதித்துள்ளனர். இதற்காக கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இந்த தகவலறிந்த தேசிய புலனாய்வு முகமை, வாட்ஸ் அப் கொலை பிளான் குறித்து கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவை போலீஸார் விசாரணை நடத்தி ஈரோட்டைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருச்சியைச் சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையைச் சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கூட்டுசதி, சாதி, மத, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவினாசி சிறையில் அடைத்தனர். சஹானாவின் தாய் நூர்நிஷா, திருவாரூர் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி நிர்வாகியாக உள்ளார். மதம் மாற எதிர்ப்பு தெரிவித்தவரை, சுட்டுக்கொல்ல வாட்ஸ் அப்பில் திட்டம் தீட்டம் தீட்டப்பட்ட விவாகரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in