
சோழவரம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற போலீஸ் என்கவுண்டரில் ரவுடிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (53). அதிமுக பிரமுகரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி காலை வீட்டருகே உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் குறித்து செங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையான பார்த்திபன் மீது செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் சோழவரம் பகுதியை சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன்(40) தலைமையிலான கும்பல் பார்த்திபனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து செங்குன்றம் போலீஸார் தனிப்படை அமைத்து கூலிப்பட்டி தலைவன் தலைவன் முத்து சரவணன் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி முத்து சரவணன் டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்து சென்று ரவுடி முத்துசரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதற்கு இடையே நேற்று ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜ் ஆவடி காவடி காவல் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் தனது மகன் முத்து சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆகையால் மகனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மகன் டெல்லியில் இருந்து கடந்த 9ம் தேதி என்னை செல்போனை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது பார்த்திபன் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், ஆனால் போலீஸார் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி தனது மகன் முத்து சரவணனை போலீஸார் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய போவதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே போலீஸாரால் எனது மகன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் ஆகையால் அவருக்கு கூறிய பாதுகாப்பு தரவேண்டும் என தந்தை கோவிந்தராஜ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை சோழவரம் அடுத்த புதூர் மாரம்பேடு கண்டிகை அருகே ரவுடி முத்து சரவணன் மற்றும் அவனது கூட்டாளி சண்டே சதீஷ் ஆகிய இருவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர்.
முத்து சரவணன் மீது 6 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளும், சண்டே சதீஷ் மீது ஐந்து கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ரவுடிகள் என்கவுண்டர் எப்படி, எப்போது, எதற்காக, நடந்தது என்பது குறித்து போலீஸார் இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. நேற்று ரவுடியின் தந்தை தனது மகனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல சதி நடப்பதாக புகார் அளித்த நிலையில் இன்று காலை ரவுடி முத்து சரவணன் என்கவுண்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து போலீஸார் கூறுகையில், அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் ரவுடி முத்து சரவணனை தேடிவந்ததாகவும், இன்று அதிகாலை சோழவரம் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரி ஜவகர் தலைமையில் 3 காவலர்கள் சம்பவயிடத்திற்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றபோது அவர்கள் போலீஸாரை நோக்கி சுட்டதில் 3 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனே போலீஸார் தற்காப்புக்காக திருப்பி சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.