
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இரண்டு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு திரிபுரா மாநிலம் தர்மாநகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடினர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட சில நாட்களுக்கு பிறகு சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திய போது, வீட்டின் அருகே வசித்து வந்த 2 பேர் சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு அகர்தலாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 4 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றவாளிகள் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.