
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கணவரின் வருமானம் குடும்பத் தேவைகளுக்கே போதுமானதாக இருந்துள்ளது. இந்நிலையில், அவசர தேவை ஏற்பட்டதால், ஆன்லைன் ஆப் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன் 7,000 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து அக்டோபர் 2-ம் தேதி பெற்ற கடனுக்கான தவணை மற்றும் முழுத்தொகையினையும் கூகுள் பே மூலம் திரும்ப செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் செயலி நிறுவனத்தில் பேசுவதாக இவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்துள்ளது. தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட, அந்த நபர் பணம் செலுத்தியதற்கான ரசீதை அனுப்பு வைக்க கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியதற்கான ரசீதை அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அந்தப்பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது அந்த லோன் ஆப் கும்பல். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அந்த எண்ணிற்கு அழைத்தபோது கடன்வாங்கிய முழு தொகையையும் செலுத்தவில்லை என்றால் அந்த படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிற்கு அனுப்பி மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதன்காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் உடனடியாக இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆன்லைனில் பெற்ற கடனை செலுத்தியபோது பணம் கேட்டு இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...