சென்னையில் நேரத்தை கடந்து பட்டாசு வெடிப்பு! 581 வழக்குகள் பதிவு

பட்டாசு
பட்டாசு

சென்னையில் தீபாவளி நாளன்று பட்டாசு தொடர்பாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக தீபாவளி நாளின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மேற்கோள்காட்டி சென்னை காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கியது. சீன பட்டாசுகள் மற்றும் 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சென்னை காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி நாளான நேற்று சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 125 டெசிபலுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்ததாக 19 வழக்குகளும், அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையானது உயரும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in