கரும்பு தோட்டத்தில் 3 பேர் வெட்டிக்கொலை... கொலையாளிகள் யார்?- குழப்பத்தில் போலீஸ்!

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் ராதாகிருஷ்ணன் - அன்னபூரணி தம்பதியினர்.  இவர்களுக்கு சந்தோஷ்குமார், ராஜேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகனான சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். சந்தோஷ்குமார்,  தாய், தந்தையுடன்  ஒன்றாக வசித்து வந்தார். 

இவர்களது இரண்டாவது மகன் ராஜேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இதனால் இவர் தினமும் தனது தாய், தந்தை மற்றும் அண்ணனை தொடர்பு கொண்டு செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்  ராஜேஷ் அவர்கள் மூன்று பேரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

ஆனால் யாரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ், தனது உறவினர் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து தனது வீட்டிற்கு சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அதையடுத்து  அங்கு சென்ற உறவினர் வீடு பூட்டப்பட்டிருந்ததால் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார்.  அங்கும் மூவரையும்  காணவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு இடையே சென்று தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார் மற்றும் அன்னபூரணி ஆகிய மூன்று பேரும் உடலில் வெட்டுக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன?  கொலையாளிகள் யார்? என்று    தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தாய், தந்தை மகன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in