குவாரி விபத்தில் மூவர் பலி? உரிமையாளர் அதிரடி கைது

குவாரி
குவாரி கோப்புப்படம்

நெல்லையில் நடந்த குவாரி விபத்தில் மூவர் பலியாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. முன்னெச்சரிக்கையாகச் செயல்படாததாக குவாரி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே ஆடைமிதிப்பான் குளம் உள்ளது. இதன் அருகிலேயே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இங்கே குவாரியின் உள்பகுதியில் நேற்று இரவு வழக்கம் சில தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்பகுதியில் இருந்த பாறைகள் உடைந்து, உருண்டு விழுந்தன. நெல்லையில் மழை பெய்து வருவதால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணியாளர்கள் பணியில் ஈடுபடவில்லை. குவாரிக்குள் 2 லாரிகள், 3 ஜேசிபி இயந்திரங்கள் மட்டும் இருந்தன. இதில் ஜேசிபி ஓட்டுநர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் அமர்ந்திருந்த ஜேசிபியின் மீது முதலில் பாறைகள் உருண்டு விழுந்தன. தொடர்ந்து அங்கே நின்ற லாரிகள் மீதும் பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் லாரி ஓட்டுநர்கள், செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோரும் சிக்கினர்.

குவாரியின் உள்பகுதியில் பாறை விழுந்து 6 பேர் வெளியில் வர முடியாமல் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இருவர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ராட்சச கிரேன்களின் உதவியுடன் மற்ற 4 பேரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இன்று அதிகாலை முதலே தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. தேடுதல் பணியில் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்தில் மூன்று தொழிலாளிகள் உயிர் இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குவாரியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத குவாரி உரிமையாளர் சங்கர நாராயணனையும், அவரது மகன்களில் ஒருவரையும் சற்று முன்னர் போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in