
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இளைஞரிடம் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்ற போலீஸாரிடம் அவர் சரியாக ஒத்துழைக்காமல்படுத்தி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் போக்குவரத்து ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீஸார் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். காரில் இருந்தவர்கள் போலீஸாரைக் கண்டவுடன் வாகனத்தை வேகமாக எடுக்க முற்பட்டனர்.
இந்நிலையில், சுதாரித்துக் கொண்ட போலீஸார், அந்த காரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் அனைவரும் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஐந்து பேர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததும் தெரியவந்தது. இந்த சோதனையின்போது நன்றாக ஊதுமாறு போலீஸார் இளைஞர் ஒருவரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும், அவர் ஊதுவது போல நடிப்பதும், அவரிடம் மீண்டும் மீண்டும் போலீஸ்காரர் ஒருவர் கெஞ்சுவதுமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையடுத்து குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.