கொலை செய்யப்பட்ட பிரதீப்
கொலை செய்யப்பட்ட பிரதீப்

மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை கொலை செய்த மனைவி!

தற்காப்பு என கூறி விடுவித்தது சென்னை போலீஸ்

குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை, மனைவி சுத்தியால் அடித்துக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்தது. தற்காப்புகாக தாக்கியதில் கணவன் உயிரிழந்ததால், மனைவியை காவல் துறையினர் விடுவித்தனர்.

சென்னை, ஓட்டேரி புதிய வாழைமா நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் (43). இவருக்கு திருமணமாகி பிரீத்தா (41) என்ற மனைவியும், ஸ்ரீகீர்த்தி(20) என்ற மகளும் கௌதம்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான பிரதீப், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு, போதையில் வீட்டுக்கு வந்த பிரதீப், தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா, தனது கணவரிடம் இருந்து மகளை மீட்க போராடியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த பிரீத்தா, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் அடித்ததில் அவர் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் பிரீத்தி இதுகுறித்து உறவினர்கள், அக்கம்பக்கத்தாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்தவர்கள் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், பிரதீப் சடலத்தைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மனைவி பிரீத்தாவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மகள், மகனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை தற்காப்புக்காக தாக்கியபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து 302 சட்டப்பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கை, சட்டப்பிரிவு 100-ன் கீழ் மாற்றம் செய்து, பிரீத்தாவை விடுவிக்க ஓட்டேரி போலீஸார் முடிவு செய்துள்ளதாக காவல் துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அந்த இளம்பெண் அவரை வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், இளம்பெண் தற்காப்புகாக தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து, அந்தப் பெண்ணை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in