
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சூ மோட்டோ வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.36 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்னர் 2015-ம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட, சொத்துக்குவிப்பு வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்று சொல்லி அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாக வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த ஜூன் மாதம் 28 -ம் தேதி இந்த தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படாமால் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து (சூ மோட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், “ஆனந்த வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி” என பாராட்டு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் உண்டாகி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்