
ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் பள்ளி மாணவியை இளைஞர்கள் தள்ளிவிட்டனர். இதில் மாணவி 2 கால்கள், ஒரு கையை இழந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினர். அந்த நேரத்தில் வந்த ரயில் ஏறியதில், 2 கால்கள் மற்றும் ஒரு கையை இழந்து மாணவி படுகாயமடைந்து அலறித் துடித்தார். அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர். இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.