மனுவை காவல் துறை உரிய காலத்தில் பரிசீலிக்கவில்லை! : பப்ஜி மதனுக்கு எதிரான குண்டாஸ் ரத்து

மனுவை காவல் துறை  உரிய காலத்தில் பரிசீலிக்கவில்லை! : பப்ஜி மதனுக்கு எதிரான குண்டாஸ் ரத்து

குண்டர் சட்டத்தில் பப்ஜி மதனை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக மதன்குமார் என்கிற பப்ஜி மதன் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரவு போலீஸார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏராளமான புகார்கள் வந்தததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர் காவல் ஆணையர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்துச் செய்யக்கோரி மதன்குமார் என்கிற மதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், "தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம், ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக்கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு" எனவும் கூறியுள்ளார்.

"தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள் தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை" எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், " மனுதாரர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போது அளித்த கோரிக்கை மனுவை அரசும், காவல் துறையும் உரிய காலத்தில் பரிசீலக்கவில்லை. எனவே, மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தல் சிறையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in