கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை

7 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு
கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் எனவும் தண்டனை விவரம் வரும் 8ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு கடந்து வந்த பாதையை சற்று பார்ப்போம்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலின இளைஞரான இவர், காதல் பிரச்சினை காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் சுட்டுக் கொலை

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜோதிமணி (40) என்பவர் சொத்துப் பிரச்சினை காரணமாக தனது கணவர் சந்திரசேகர் என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜூக்கு கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனால் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே யுவராஜூக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

18 மாதங்களில் முடிக்க உத்தரவு

இந்நிலையில் யுவராஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத்தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு உத்தரவி்ட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது ஆஜரான யுவராஜ், அருண்
நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது ஆஜரான யுவராஜ், அருண்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை விசாரணை தொடங்கியது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் அமுதரசு என்பவரை தவிர 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதல் நாளில் கோகுல்ராஜ் தாய் சித்ரா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது கோகுல்ராஜ் அணிந்திருந்த ஆடைகள் அவரிடம் காட்டப்பட்டு, அவரது ஆடை என உறுதி செய்யப்பட்டது. நீதிமன்ற கூண்டில் நின்று முதல் நாளில் சாட்சியம் அளித்த கோகுல்ராஜ் தாய் சித்ரா, குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோரை பார்த்து ஆவேசமாக பேசினார். மேலும் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதுகொண்டே சாட்சியம் அளித்தார்.

மதுரை நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கு விசாரணை வெளிப்படையாக நடக்கவில்லை. மிரட்டலுக்கு பயந்து சிலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். எனவே இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

நாமக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த கோகுல்ராஜ் தாயார் சித்ரா
நாமக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த கோகுல்ராஜ் தாயார் சித்ரா

விசாரணை அதிகாரி தற்கொலை

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து டிஎஸ்பி தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகியவை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இதன்பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in