
மகாராஷ்டிராவில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் மும்பை - கோவா நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலையில் சிப்லூன் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் பாலத்தின் ஒரு பில்லர் இடிந்தது. இதையடுத்து அடுத்த சில நொடிகளில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து கீழே விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நேரத்தில் கீழே யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிக்கப்பட்டது. பாலம் கட்டும் பணிக்காக கிரேன் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த கிரேனும் கீழே விழுந்தது.
இந்த நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணியின் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.