
மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளைஞரை ஜெயிலர் திரைப்பட வில்லன் பாணியில் தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்தவர் கோபி(25). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார். கணவர் இறந்துவிட்டதால் சசிகலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கவுதம் (22) என்பவருக்கும் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை அறிந்த மருமகன், மாமியாரை கண்டித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருவரும் சந்தித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோபி கவுதம் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் கோபி தான் மறைத்து வைத்திருந்த சுத்தியால் கவுதம் நடுமண்டையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கவுதம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலையில் 30 தையல் போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கோபி காவல் நிலையத்தில் சுத்தியை ஒப்படைத்து போலீஸில் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.