54 முறை போலீஸ் அனுப்பிய மெசேஜ்; பதறிய சென்னை பேராசிரியர்: காரணம் இதுதான்!

54 முறை போலீஸ் அனுப்பிய மெசேஜ்; பதறிய சென்னை பேராசிரியர்: காரணம் இதுதான்!

காரில் சென்ற பேராசிரியர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அவரது காரின் பதிவு எண்ணை வைத்து போக்குவரத்து காவல்துறை சார்பில் 54 முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதில் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் இதுகுறித்து விளக்கம் கேட்டு காவல்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவர் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மென்பொருள் நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியாக பணியாற்றி வருகிறார். சஞ்சய்குமார் கடந்த மாதம் புதிய கார் (Hundai Creta) ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி இவருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் கடந்த 19-ம் தேதி வேப்பேரி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற தவறுக்காக 100 ரூபாய் அபராதம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அடுத்த சில விநாடிகளில் அதே விதிமீறலுக்காக அடுத்தடுத்து 54 தனித்தனிச் ’செலான்கள்’ வாயிலாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாகவும், ஒவ்வொன்றிற்கும் 100 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறியும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர் சஞ்சய் குமார் சென்னை காவல்துறையின் இணையதள முகவரிக்கு இது தொடர்பாக அந்த வாகன பதிவு எண் இருசக்கர வாகனத்தின் எண் இல்லை எனவும், காரின் பதிவு எண்ணை வைத்து தவறாக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தனது தரப்பு விளக்கத்தை புகாராக அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவராக போக்குவரத்து காவல்துறையை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, 54 முறை ஒரே குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த தவறு என அலட்சியமாக பதிலளிக்கப்பட்டது. அத்துடன், அதை சரிசெய்ய adctraffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட செலான்களை இணைத்து, பரிந்துரை கடிதம் அனுப்பினால் 20 நாட்கள் கழித்து பரிசீலிக்கப்பட்டபின் தவறுதலாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல் காரின் பதிவு எண்ணை வைத்து இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக எப்படி வழக்கு போட்டுள்ளீர்கள் என கேட்டதற்கு, இது நாங்களாக பதிவு செய்த வழக்கு இல்லை எனவும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதை சரிசெய்ய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறையின் அலுவலகத்தை அணுகி கார் பதிவு எண் தொடர்பான விவரங்களுடன் மனு அளித்து வழக்கை ரத்து செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

காரின் பதிவு எண்ணை வைத்து காரின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது தலைக்கவசம் அணியவில்லை என 54 முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதேபோன்று தவறுதலாக ஏராளமானோருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த தவறு என்ற பட்சத்தில் போக்குவரத்து காவல்துறையின் தரப்பில் நடந்த தவறுக்கு பொதுமக்களை அலைக்கழித்து 20 நாட்கள் காத்திருக்க வைப்பது எப்படி நியாயமாகும் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in