கோவை மருதமலை கோவிலுக்கு உட்பட்ட உபகோயிலில் 14 கிராம் எடையுள்ள சுவாமி நகையை திருடி விற்பனை செய்த அர்ச்சகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை முருகன் கோயிலுக்கு ஏராளமான உபகோயில்கள் உள்ளன. அதில் ஒன்று வடவள்ளி அருகே உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகும். இந்த கோயிலில் கடந்த 23ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து, துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நகைகளை பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது 14 கிராம் தங்கத்தினாலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டுமணிகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி நகைகள் செய்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் ஹர்ஷினி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராக பணியில் சேர்ந்த ஸ்ரீவத்சாங்கன் (40) என்பவரை அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது சுவாமியின் நகைகளை திருடி அதனை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்பட்ட 14 கிராம் தங்க நகைகளை மீட்டனர். இது தொடர்பாக ஸ்ரீவத்சாங்கனை கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் மீது கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எக்மோர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. புதுப்பேட்டையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் 8 கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடியதற்காக 60 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கோவைக்கு வருகை தந்து, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு இந்த கோயிலில் அவர் பணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.